- °C
Are You a business owner?
List Your Business / ADதமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நேற்று அதிகபட்சமாக திருவள்ளூர் அருகில் உள்ள திரூரில் 112 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் ஊரான வேலூரில் 110 புள்ளி 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தால் மக்கள் அவதியடைந்தனர். திருத்தணியில் 108 சென்னை மீனம்பாக்கத்தில் 106, ஈரோட்டில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தஞ்சை, மதுரை, திருச்சி, நாகை, நாமக்கலிலும் வெயில் வாட்டியது. விருத்தாசலம், விரிஞ்சிபுரம் உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் சதமடித்தது.
இந்நிலையில் தென் தமிழக பகுதிகளின் மேல்பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நீலகிரி , கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு , கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல் நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் , திருப்பத்தூர் வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, இயல்பை ஒட்டி வெயில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 106 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என்றும் சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மாவட்டம் அழகர் கோயில், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி பகுதிகளில் மாலையில் அரைமணிநேரம் திடீரென மழை பொழிந்தது. இதனால் வெப்பம் தணிந்தது. இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்று வட்டாரங்களிலும் மழை பொழிந்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். லேசாக தொடங்கிய தூறல் , பின்னர் அரை மணி நேரம் கனமழையாக கொட்டித் தீர்த்தது.
வட தமிழ்நாட்டில் வெப்ப அலை இன்றுடன் ஓய்ந்துவிடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, குமரிக்கடல், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் வரும் 3 ஆம் தேதி வரையும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை வரை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.